அடிப்படை கல்விக்கு மட்டும் அரசு பள்ளிகளா?உயர் கல்விக்கு தனியார் பள்ளிகளை தேடும் அவலம்

  அரசு பள்ளிகளை பெயரளவிற்கு தரம் உயர்த்தும் நடவடிக்கை தொடர்கிறது. ஆசிரியர் பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்  உயர்கல்வி பெற முடியவில்லை.
 
              தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் பெருமையை கூறவும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் செல்வாக்கை வெளிப்படுத்தவும், நூற்றுக்கணக்கான பள்ளிகள் தரம் உயர்த்தி அறிவிக்கப் படுகின்றன.மாநில அளவில் பல பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை கட்டடம் பற்றாக்குறை நீடிக்கிறது. பல பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு கூட, ஆசிரியர்கள் நியமிக்கவில்லை. "சீட்' ஒதுக்கீடு :தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மட்டுமே, பொறியியல் மற்றும் மருத்துவக்

கல்லூரிகளில் அதிக "சீட்' பிடிக்கும் நிலை உள்ளது. அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல் நிலை வகுப்பு சிறப்பாக பாடம் நடத்தும் சூழ்நிலை இல்லை.

பல அரசு பள்ளிகளில் பொதுத் தேர்வு செல்லும் மாணவர்களை தயார் படுத்த போதிய ஆசிரியர்கள் நியமிக்கவில்லை. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவக்காமல், பெயரளவில் பள்ளிகளை தரம் உயர்த்திவிடுகின்றனர். அப்பள்ளிகளில் கல்வித் தரம் மட்டும் உயராமல் உள்ளது.

அதிரடி தேவை :

அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 50 சதவீத "சீட்' ஒதுக்கீடு போன்ற அதிரடித் திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டும்.

அடிப்படை கல்வியை அரசு பள்ளியில் முடிக்கும் மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு கல்வியை மட்டும், சில லட்சம் செலவழித்து தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். இங்கு மாணவ, மாணவிகளை பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் "சீட்' பெறுவதற்கு தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.

இதே நிலை நீடித்தால் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் "சீட்' பெற முடியாத நிலை ஏற்படும். அரசு சார்பில் பெரும் தொகை செலவழித்தும், <உயர்கல்வி பெற முடியாத நிலை உருவாவதை தடுக்க முன் வரவேண்டும்.