அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு: இணைய வழியில் பதிய டிச.31 கடைசி நாள்

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு (ஏஐபிஎம்டி) வெளியிடப்பட்டுள்ளது.



இதற்கு இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசித் தேதியாகும். அதன்பிறகு, தாமதக்
கட்டணத்துடன் 2015 ஜனவரி 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவிபெறும், தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பு இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடான 15 சதவீதத்தில் மாணவர் சேர்க்கையைச் செய்வதற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. வருகிற 2015-ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

2015-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மூன்று மணி நேரம் நடத்தப்படும் இந்தத் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களிலிருந்து 180 கேள்விகள் கேட்கப்படும். இவை அனைத்தும் "அப்ஜெக்டிவ்' (கொள்குறி) வகை தேர்வு முறைக் கேள்விகளாக

இருக்கும். இதுகுறித்து மேலும் விவரங்களை www.aipmt.nic.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.