2014–ம் ஆண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இஸ்ரோ தலைவருக்கு இடம்

சென்னை,
இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு (இஸ்ரோ) இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. அந்தவகையில், செவ்வாய் கிரக ஆய்வுக்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் கடந்த செப்டம்பர் 24–ந் தேதி
வெற்றிகரமாக செவ்வாயின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன் மூலம் செவ்வாய் கிரக ஆய்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற ஒரே நாடு என்ற வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை இந்தியா எட்டியது.
அடுத்ததாக உள்நாட்டிலேயே கிரயோஜனிக் என்ஜினை வெற்றிகரமாக தயாரித்து சாதனை படைத்துள்ளது. அத்துடன், மிக நீளமானதும், எடை அதிகம் கொண்டதுமான ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் கடந்த 18–ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த வெற்றிகளால் விண்வெளி துறையில் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இந்திய விஞ்ஞானிகள் சிறந்து விளங்குகின்றனர். இதை மெய்ப்பிக்கும் விதமாக பிரபல ‘நேச்சர்’ பத்திரிகை வெளியிட்டுள்ள 2014–ம் ஆண்டின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில், இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணனின் பெயர் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது. சமீப காலத்தில் இந்த கவுரவத்தை பெற்றுள்ள முதல் இந்தியர் ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.