10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் 22 முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பழைய பாடத்திட்டத்தில் தோல்வியுற்றவர்கள், தோல்வியுற்ற பாடங்களை மட்டும் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
 
        பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தில் அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற்று செய்முறைத் தேர்வெழுதிய பின்பே அறிவியல் பாடத்தேர்வினை மார்ச் 2015 தேர்வினை எழுத வேண்டும். ஓ.எஸ்.எல்.சி பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தை தவிர ஏனைய பாடங்களில் தோல்வியுற்றிருப்பின், தோல்வியுற்ற பாடங்களை மட்டும் தற்போதுள்ள பாடத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.  மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்திய பழைய பாடத்திட்டத்தில் ஓரிரு பாடங்களில்கூட தோல்வியுற்றிருப்பினும் மேற்படி தேர்வர்கள் பத்தாம் வகுப்பு புதிய பாடத்தில் அனைத்துப் பாடங்களையும் எழுத வேண்டும்.

இவ்வலுவலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் நேரடியாக சென்று விண்ணப்பிக்க இயலாத வெளி மாநில மற்றும் வெளிநாடு வாழ் தனித்தேர்வர்கள், மார்ச் மற்றும் ஏப்ரல் 2015 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இத்துறையின் அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் தேர்வரின் குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் மூலம் சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (பணியாளர்) அவர்களை மேற்குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. 

கல்வி மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறைகள் சேவை மையங்களில் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை மாலை 5.00 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.125, கூடுதலாக ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175 செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணத்தினை பணமாக செலுத்த வேண்டும். பார்வையற்றோருக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பத்தினைப் பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். அதனை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.