பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது நாளை அறிவிப்பு வெளியாகும்

புதுடெல்லி,
சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதற்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து வருகின்றன.

கடைசியாக கடந்த 1–ந் தேதி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58 குறைந்து, ஒரு லிட்டர் ரூ.67.01 ஆனது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.43 குறைந்து லிட்டர் ரூ.56.84 ஆனது.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 80.85 அமெரிக்க டாலராக (சுமார் ரூ.4,880) ஆக உள்ளது.
எனவே பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் குறைக்க உள்ளன. இது குறித்த அறிவிப்பு, நாளை வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த முறை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.20 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.10 வரையிலும் குறைக்கப்படலாம். இந்த விலை குறைப்பு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.