இந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியார் நூல்கள் அறிமுகம் மத்திய மந்திரி அறிவிப்பு


புதுடெல்லி
திருவள்ளுவர், பாரதியார் எழுதிய நூல்கள் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.

தருண் விஜய் உத்தரகாண்டை சேர்ந்த பா.ஜனதா எம்பி தருண் விஜய் டெல்லி மேல்–சபையில் பேசும்போது தமிழ் மொழி இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழியாகும். வரும் ஆண்டு முதல் திருவள்ளுவரின் பிறந்த நாளை வட இந்திய மாநிலங்களின் அனைத்துப் பள்ளிகளிலும் கொண்டாடுவதற்கும் வள்ளுவரின் குறளில் உள்ள சிறப்புக்களை வட இந்தியாவின் பள்ளிக் குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இது கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினராலும் பெருத்த வரவேற்பை பெற்றது. தருண் விஜய் உரையைத் தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி வரும் ஆண்டில் இருந்து இந்தியாவின் அனைத்துப் பள்ளிகளிலும் திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.
நன்றி தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து நேற்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தருண் விஜய் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட சில தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானியை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்
பின்னர் ஸ்மிரிதி இரானி கூறும்போது, விரைவில் திருக்குறள் நூல் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களுக்கும் மத்திய அரசு சார்பில் பரிசாக வழங்கப்படும். அவருடைய வாழ்க்கை வரலாறும் படைப்புக்களும் பரவலாக அறிமுகப்படுத்தப்படும். திருவள்ளுவரின் பிறந்தநாள் இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் விமர்சையாகக் கொண்டாடப்படும். அதே போல மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் படைப்புக்கள் வட இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
மேலும் இந்திய மொழிகளான கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும் தகுந்த முறையில் கவுரவிக்கப்படும். இந்திய மொழிகளின் வளமை மற்றும் பாரம்பரியம் மாணவர்களுக்கு பரவலாக அறிமுகப்படுத்தப்படும். இது நமது அரசின் மிகவும் முக்கியமான பணியாகும் என்று கூறினார்.
பொன்.ராதாகிருஷ்ணன் இது குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பாராளுமன்றத்தில் பா.ஜனதா எம்.பி தருண் விஜய், திருவள்ளுவர் பிறந்த நாளை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும்; திருக்குறளையும் பாடநூல்களில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி திருவள்ளுவர் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க சென்ற போது, நாடு முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்படும், திருக்குறள் நூலை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடு முழுவதும் பள்ளிகளில் விநியோகிக்கப்படும் என்றும், மாணவ, மாணவியர்களிடைய திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்றை தெரியபடுத்த திருவள்ளுவர் பிறந்தநாளில் வருடம்தோறும் விழிப்புணர்வு விழா மற்றும் போட்டிகள் அரசால் நடத்தபட்டு சான்றுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பாரதியார் அதேபோல் பாரதியார் பிறந்த நாள் விழாவையும் தேசிய விழாவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, பாரதியார் பிறந்தநாள் விழாவையும் தேசிய விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.