அங்கன்வாடி பணியாளர் நேர்முக தேர்வு திடீர் ரத்து: முன்னறிவிப்பு இல்லாததால் சாலை மறியல்

முன்னறிவிப்பு இன்றி, அங்கன்வாடி பணியாளருக்கான நேர்முகத் தேர்வு திடீரென ரத்தானதால், ஆர்வமுடன் பங்கேற்க வந்த பெண்கள், சாலைமறியலில் ஈடுபட்டனர்.
         அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிகளுக்கான, நேர்முகத் தேர்வு, நேற்று நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. விண்ணப்பித்தோர், அதிகாலை முதலே, பகுதிகளில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு ஆர்வமுடன் சென்றனர். அங்கு, நேர்முகத்தேர்வுக்கான அறிகுறி ஏதும் இல்லை. நீண்ட நேரம் அலுவலகம் திறக்கப்படாததால், தேர்வர்கள் அதிருப்தியில் திரும்பிச் சென்றனர். சென்னை, புதுப்பேட்டையில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலத்திற்கு வந்த பெண்கள் ஆத்திரமடைந்து, எழும்பூர் ஆதித்தனார் சாலையில் கூடி, திடீரென மறியலில் ஈடுபட்டனர். எழும்பூர் போலீசார், பேச்சு நடத்தினர். அங்கு வந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரிகள், 'நேர்முகத் தேர்வு நடத்த, கோர்ட் தடை விதித்து உள்ளது. அதனால், நேர்முகத்தேர்வு நடத்தப்படவில்லை' என்றனர். அறிவிப்பு பலகையிலும் விவரத்தை ஒட்டியதை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.