விற்பனை சந்தையில் இலவச 'லேப்டாப்'க்கு கிராக்கி! பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியம்

கோவை : பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, அரசால், இலவசமாக வழங்கப்பட்டு வரும் லேப்டாப்க்கு சந்தையில், கிராக்கி அதிகரித்துள்ளது. இதற்கு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணமாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு, கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு வண்ண பென்சில், அட்லஸ், கணித உபகரணங்கள், காலணி, லேப்டாப் உட்பட, 14 வகையான நலத்திட்ட பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இலவச லேப்டாப்க்கு ஒவ்வொரு ஆண்டும், சுமார் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், தமிழக பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில், லேப்டாப் வழங்கப்படுகிறது. ஆனால், 95 சதவீத மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் அதன் பயன்பாடு குறித்த அடிப்படை பயிற்சிகள் இல்லை. பெரும்பாலான பெற்றோர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு இன்மையால், குடும்ப பொருளாதார சூழல் காரணமாக விற்பனை செய்கின்றனர்.

லேப்டாப், 5000 முதல் 8000 ரூபாய் வரை சந்தையில் பரபரப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, கல்லுாரியில் பயிலும் மாணவர்கள், விலை கொடுத்து வாங்க அலைமோதி வருகின்றனர். கேரளா மாணவர்கள் இலவச லேப்டாப்களை வாங்க ஆர்வம் காண்பித்து வருகின்றனர். லேப்டாப் விற்பனை செய்யப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பல்வேறு புகார்கள் பெறப்பட்டது. தொடர்ந்து, 'லேப்டாப் பயன்படுத்தி பள்ளி, கல்லுாரிகளில் பாடம் கற்பிக்க வேண்டும்; மாணவர்களுக்கு லேப்டாப் பயன்படுத்தி பாடத்திட்டம் சார்ந்த பணிகள் வழங்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டது. ஆனால், இலவச லேப்டாப் மாணவர்கள் பள்ளியை முடித்து சென்ற பிறகும், கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து முடித்து சென்ற மாணவர்களையும் அழைத்து வழங்கும் அளவுக்கு கால தாமதமாக வழங்குவதால், வகுப்பறையில் லேப்டாப் பயன்படுத்த இயலாத சூழல் ஏற்படுகிறது. இதனால், தாமதமாக வழங்கப்படும் லேப்டாப் மாணவர்களுக்கு கிடைத்த சில நாட்களிலேயே, விற்பனைக்கு சந்தைக்கு வந்துவிடுகின்றது. சில கல்லுாரி மாணவர்களே, லேப்டாப் விற்பனை சந்தையில் புரோக்கர்களாக செயல்படுகின்றனர்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'லேப்டாப் உரிய நேரத்தில் கிடைக்கும் பட்சத்தில் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்க முடியும். ஆனால், மிகுந்த காலதாமத்ததுடன் கிடைப்பதால், இதுகுறித்து அறிவை மாணவர்களுக்கு ஏற்படுத்த இயலவில்லை. மேலும், பள்ளி முடித்து செல்லும் அனைத்து மாணவர்களும், தனது கல்விக்காக லேப்டாப் பயன்படுத்துகின்றனரா அல்லது விற்பனை செய்கின்றனரா என்பதை கண்காணிப்பது இயலாத காரியம். பிளஸ்2 மாணவர்களுக்கு பதிலாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கினால், தொழில்நுட்ப பயிற்சி இரண்டு ஆண்டுகள் வழங்கலாம். விற்பனை செய்வதையும் எளிதாக தவிர்க்கலாம்' என்றனர்.