தந்தை உயிரிழந்த பிறகு விவாகரத்தான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை பெறும் உரிமை உண்டு பெண் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


அரசுப்பணியில் இருக்கும் தந்தை உயிரிழந்ததால், விவாகரத்தான அவரது மகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கான உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக பி.ஆர். ரேணுகா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ‘‘கால்நடை பராமரிப்புத் துறை யில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்த எனது தந்தை கடந்த 1998-ம் ஆண்டு உயிரிழந் தார். அதனையடுத்து கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கு மாறு கோரி நான் மனுதாக்கல் செய் தேன். எனினும் எனது தந்தை மரண மடைந்தபோது நான் திருமணம் ஆனவர் என்பதாலும், அதன் பிறகு ஒன்றரை வருடம் கழித்துதான் எனக்கு விவாகரத்து கிடைத்தது என்ற காரணத்தைக் கூறியும் கருணை அடிப்படையில் வேலை தர கால்நடை பராமரிப்புத்துறையினர் மறுத்து விட்டனர். ஆகவே இது தொடர்பான அவர்களது உத்தரவை ரத்து செய்யவும் எனக்குப் பணி வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்’’ என்று மனுவில் அவர் கோரியிருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி டி.ஹரிபரந்தாமன், திருமணமாகி விவாகரத்துப் பெற்ற அந்த பெண்ணுக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உள்ளது என்று அண்மையில் தீர்ப்பளித்தார். ‘‘தந்தை உயிரிழந்தால் கருணை அடிப்படையில் வேலை வழங்க திருமணம் ஆன மகன் மற்றும் திருமணமான மகள் என்று பிரித்துப் பாரபட்சம் காட்ட சட்டப்படி முடியாது. மனுதாரர் கணவனால் கைவிடப்பட்டு விவாகரத்து பெற் றுள்ளார். மனுதாரரின் தந்தை உயிரிழந்தபோது அவரது பராமரிப் பில்தான் மனுதாரர் இருந்துள்ளார். ஆகவே கருணை அடிப்படையில் பணி பெற அவருக்கு உரிமை இல்லை என்று கூற முடியாது. திருமணத்தைக் காரணம் காட்டி மகன், மகளுக்கு இடையே பார பட்சம் காட்டுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. ஆகவே, மனுதாரருக்கு 8 வாரங்களுக்குள் வேலை வழங்க வேண்டும்’’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.