விடுமுறை குறித்த விபரம் தெரியாமல் பள்ளிக்கு வந்து திரும்பிச் சென்ற மாணவர்கள்

கல்வித்துறையின் தெளிவான உத்தரவு இல்லாததால் நேற்று மாணவர்கள் பள்ளிக்கு வந்த பிறகு விடுமுறை என திருப்பி அனுப்பப்பட்டனர். நேற்று முன்தினம் இரவிலிருந்து நேற்று காலை வரை சிவகங்கை மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலான மழை பெய்தது . நேற்று ஒருநாள் மட்டும் பெய்த
மழையளவு (மில்லி மீட்டரில்): சிவகங்கை - 30,காரைக்குடி - 24, திருப்பத்தூர் - 17.2,தேவகோட்டை - 27,மானாமதுரை - 27, திருப்புவனம் - 20.4,இளையான்குடி 32.சராசரி மழையளவு 25.3 மி.மீ.,இந்த தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதா, வேண்டாமா என பள்ளிகள் யோசித்தன.

கலெக்டரிடமிருந்தோ, சி.இ.ஓ., விடம் இருந்தோ முறையான அறிவிப்பு வராததால், தொடர்ந்து அந்தந்த அலுவலகங்களுக்கு போன் மூலம், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடர்பு கொண்டனர். ஆயினும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. முடிவில் காலை 8 மணிக்கு பிறகுதான், மழைக்கு தகுந்தவாறு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டது.
பல பெற்றோர், மழையிலும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்திருந்தனர். வெளியூரிலிருந்து பஸ்சில் வரும் மாணவர்கள், விடுமுறை குறித்த அறிவிப்பு இல்லாததால், அவர்களும் வந்தனர். பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டதால் அவர்கள் மீண்டும் மழையில் திரும்பி சென்றனர். ஊரக பகுதிகளில் உள்ள பல பள்ளிகளுக்கு 50 சதவீதம் மாணவர்கள் வந்ததால் மதியம் வரை பள்ளி நடத்தி, அதன் பிறகு விடுமுறை விடப்பட்டது.
மழையின் காரணமாக பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு, இன்று (சனிக்கிழமை) விடுமுறையா, பள்ளியா? என்ற குழப்பம் உள்ளது. தனியார் மெட்ரிக்., பள்ளிகளில், எஸ்.எம்.எஸ். அனுப்பி, பள்ளி திறக்கப்படும் தகவலை தெரிவித்து விடுகின்றனர். ஆனால், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் அத்தகைய வசதி இல்லாததால் இந்த தகவலை அவர்களிடம் தெரிவிக்க இயல்வதில்லை. பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது: கடந்த ஒரு மாதத்துக்கு முன்பும், தொடர் மழை ஏற்பட்டபோது, மாவட்ட நிர்வாகம் முறையான தகவலை முன் கூட்டியே தெரிவிக்கவில்லை. இதனால் பல பள்ளிகள் 50 சதவீத மாணவர்களுடன் இயங்கியது.
ஏற்கனவே காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் மாணவர்கள் அவதிப்பட்டு வரும் வேளையில், மழை நேரங்களில் உரிய விடுமுறை அறிவிப்பை வெளியிட வேண்டும் அல்லது தலைமை ஆசிரியர்களே விடுமுறை அளிக்கலாம் என எழுத்து பூர்வமாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும், என்றார்.