அடுத்த ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் திருவள்ளுவர் பிறந்தநாள்

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அடுத்த ஆண்டு முதல் திருவள்ளுவர் பிறந்த நாள் கொண்டாடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று அறிவித்தார்.


உத்தராகண்ட் மாநில பாஜக உறுப்பினர் தருண் விஜய் இதுதொடர்பாக மாநிலங்களவையில் கோரிக்கை வைத்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஸ்மிருதி இரானி செய்தியாளர்களிடம் கூறும்போது, "திருவள்ளுவர் பிறந்த நாளை நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என தருண் விஜய் மாநிலங்களையில் கோரிக்கை வைத்தார். இதற்கு அனைவருமே ஒருமனதாக ஆதரவளித்தனர். எனவே, அடுத்த ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திருவள்ளுவர் பிறந்த நாள் கொண்டாடப்படும்.

மேலும் பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் திருவள்ளுவர் பற்றிய நூல்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விநியோகிக்கப்படும். அவரை பற்றிய கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் போட்டிகளும் பள்ளிகளில் நடத்தப்படும்" என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, தருண் விஜய் தலைமையில் டெல்லி தமிழ் சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணன், உபதலைவர் கே.வி.கே.பெருமாள், தமிழ் பண்பாட்டுக் கழகச் செயலாளர் எம்.நடேசன் உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் 60 பேர் ஸ்மிருதி இரானியை அவரதுஅலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இவர்களுடன் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் சென்றிருந்தார்.