சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தப்ப முடியாது: கட்டண நிர்ணய குழு திட்டவட்டம்

சென்னை : 'சி.பி.எஸ்.இ., பள்ளி கள், தமிழக அரசின் விதிமுறைகளில் இருந்தோ, கட்டண நிர்ணய குழு விதி முறைகளில் இருந்தோ தப்ப முடியாது' என, கட்டண நிர்ணய குழு வட்டாரம், நேற்று உறுதியாக தெரிவித்தது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கடிவாளத்தை, தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வந்து, சமீபத்தில், தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு வட்டாரம், நேற்று கூறியதாவது: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சி.பி.எஸ்.இ.,) அங்கீகாரம் பெற்ற ஒரே காரணத்தினால், தமிழக அரசிடம் இருந்தோ, தமிழக அரசால் அமைக்கப்பட்டு உள்ள கட்டண நிர்ணய குழுவிடம் இருந்தோ, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தப்பிவிட முடியாது.
தமிழகத்தில், 500 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. அனைத்துப் பள்ளிகளுக்கும், குழு, கட்டணத்தை நிர்ணயிக்கும். இந்த கட்டணத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும். 500 மெட்ரிக் பள்ளிகளுக்கு, தற்போது, புதிதாக கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கட்டணம் நிர்ணய காலம் முடியும் பள்ளிகளுக்கு, தொடர்ந்து, மூன்று கல்வி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும். இவ்வாறு, குழு வட்டாரம் தெரிவித்தது