குறைந்தது காலாண்டு தேர்ச்சி சதவீதம்: அதிருப்தியில் கல்வித்துறை உயர் அதிகாரிகள்

அரசுப் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், கல்வித்துறை உயர் அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், விடைக்குறிப்பு இல்லாததால், சரியான மதிப்பெண் மதிப்பீடு செய்ய முடியவில்லை என, மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

          பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் இடைத் தேர்வு, திருப்பத் தேர்வு, காலாண்டு, அரையாண்டு, அலகுத் தேர்வு ஆகியன, மாநிலம் முழுவதும், பொதுத்தேர்வு நடத்துவது போல், ஒரே தேதியில் நடத்தப்படுகின்றன. அதற்கான தேர்வு அட்டணையை, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, கல்வித் துறை அறிவுறுத்தி வருகிறது. இதில், கடந்த, செப்., 15ம் தேதி, பிளஸ் 2, அதே மாதம், 17ம் தேதி, ??ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவருக்கு, காலாண்டுத் தேர்வு நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு பள்ளி வாரியாக, காலாண்டுத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்காத மற்றும் தேர்ச்சியற்ற பொதுத்தேர்வு மாணவர் பட்டியல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எடுக்க உத்தரவிடப்பட்டது. நடப்பு கல்வியாண் டில், பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்களில், பெரும்பாலானோர், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் கூட எடுக்கவில்லை. பாடம் வாரியாக, குறைந்தபட்ச மதிப்பெண் கூட எடுக்காத மாணவரின் எண்ணிக்கை மற்றும் அவர் தேர்ச்சி குறைவுக்கான காரணப் பட்டியலுடன், மாவட்ட கல்வி அதிகாரிகள், சில நாட்களுக்கு முன், பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு சென்றனர். அப்போது, கல்வி மாவட்டம் வாரியாக காலாண்டுத் தேர்வு தேர்ச்சி சதவீதத்தை பார்த்த உயர் அதிகாரிகள், மூன்றில் ஒரு பாகம் பாடத்திட்டத்தில், மாணவர் அதிகபட்ச மதிப்பெண் எடுக்கவில்லையே என்ற அதிருப்தியை, மாவட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு, பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்தால், சம்பந்தப்பட் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விடைக்குறிப்பு இல்லை:

பொதுத்தேர்வு போல, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுக்கு, விடைக்குறிப்பு வழங்கப்படுவதில்லை. இதனால், ஒவ்வொரு பள்ளி ஆசிரியரும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வர். சில பள்ளி ஆசிரியர்கள், குறைந்த மதிப்பெண் கொடுத்தால் தான், பொதுத் தேர்வுக்கு மாணவர் கடுமையாக படிப்பார் என நினைத்து, குறைந்த மதிப்பெண்ணை வழங்குவர். செய்முறை தேர்வுக்கு என, தனியாக மதிப்பெண் இருந்தாலும், அந்த மதிப்பெண்ணை கணக்கிடாமல், மீதமுள்ள, மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தி, அதை, மொத்த மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டுக் கொள்வர். காலாண்டு, அரையாண்டு மதிப்பீட்டை வைத்து, எந்த முடிவும் கூற முடியாது. இதற்கு முன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அளவில், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் குறித்து ஆய்வு நடத்தப்படும். தற்போது, மாநில அதிகாரிகளே களத்தில் இறங்கி, மதிப்பெண்களைஆய்வு நடத்தி, நெருக்கடி கொடுப்பதால், எப்படி வகுப்பு எடுப்பது என்றே தெரியவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண, பொதுத் தேர்வைப் போல, மற்ற தேர்வுகளுக்கும், விடைக் குறிப்பு வழங்கினால், விடைத்தாள் மதிப்பீடு சரியாக இருக்கும்.