50 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தக் கோரிக்கை

சட்டப்பேரவையில் அறிவித்தவாறு 50 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக விரைவில் தரம் உயர்த்த வேண்டும் என தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:
 தமிழகம் முழுவதும் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிகழாண்டில் தரம் உயர்த்தப்படும் என்று 19.07.2014-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பள்ளிகள் தரம் உயர்த்தப்படவில்லை.  தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் தொடர்பான அரசாணையை அக்.31-ஆம் தேதிக்குள் வெளியிடுவதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
 அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில் இந்த அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என்றார்.