தமிழக சட்டசபை 4-ந் தேதி கூடுகிறது: கவர்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு


தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் இறந்தது உள்பட பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்க சட்டசபையை கூட்ட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வற்புறுத்தி வந்தன.

இந்தநிலையில் தமிழக சட்டசபை டிசம்பர் 4-ந் தேதி கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கை வெளியீடு

இதுதொடர்பாக தமிழக சட்டசபையின் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழக சட்டசபையின் கூட்டத்தை டிசம்பர் 4-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 174 (1)ன் பிரிவின்படி கவர்னர் கூட்டியுள்ளார். தலைமைச் செயலகத்திலுள்ள சட்டசபை மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில்

குளிர்கால கூட்டத் தொடர் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இறுதியிலோ அல்லது நவம்பர் மாத தொடக்கத்திலோ சட்டசபை கூட்டப்படுவது வழக்கமாக உள்ளது. பொதுவாக ஒரு வாரம் இந்தக் கூட்டத் தொடர் நடைபெறும்.

கடந்த 2012-ம் ஆண்டில் ஐந்து நாட்களும், 2013-ம் ஆண்டில் 6 நாட்களும் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்றது.

எத்தனை நாட்கள்?

தற்போது டிசம்பர் மாதம் 4-ந் தேதி சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இது எத்தனை நாட்கள் நடைபெறும்? அப்போது கொண்டு வரப்படும் தீர்மானங்கள் என்ன? என்பதும், 4-ந் தேதி நடைபெறவுள்ள அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

அரசியல் சர்ச்சை

அரசியல் ரீதியான சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இந்த கூட்டத் தொடர் கூட்டப்படுகிறது. சட்டசபை கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வந்தனர்.

இவர்களுக்கு அறிக்கை மூலம் இரண்டு முறை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். சட்டசபை கூட்டுவது எப்போது என்பது எங்களுக்குத் தெரியும், மற்றவர்களின் அறிவுரை எங்களுக்குத் தேவையில்லை என்று அவர் கூறியிருந்தார்.

என்னென்னபிரச்சினைகள்?

இந்த சூழ்நிலையில், சட்டசபை கூட்டம் கூட்டப்படவுள்ளது. முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தற்போது தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் கூடும் முதல் கூட்டம் இதுதான். எனவே இந்தக் கூட்டத் தொடரில் மற்ற எதிர்க்கட்சிகளின் செயல்பாடு கவனிக்கத் தக்கதாக இருக்கும்.

அதோடு, பல குற்றச்சாட்டுகள் ஏற்கனவே அரசின் மீது வைக்கப்பட்டுள்ளன. பருப்பு, முட்டை கொள்முதலில் முறைகேடு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் இறப்பு, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்ட விவகாரம், காவிரியின் குறுக்கே கர்நாடகம் 2 அணைகள் கட்டுவதான அறிவிப்பு, யூரியா உரம் தட்டுப்பாடு போன்ற பல முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கொண்டு வர வாய்ப்புள்ளது.

பரபரப்புக்குபஞ்சமில்லை

மேலும், உள்ளாட்சி அமைப்பு தொடர்பாக சமீபத்தில் கொண்டு வரப்பட்ட அரசரச் சட்டத்தை சட்டமாக்கும் மசோதா உட்பட சில சட்ட மசோதாக்களை தாக்கல் செய்யவும் வாய்ப்புள்ளது. முக்கிய பிரச்சினைகளில் தீர்மானங்கள் இந்தக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்று சட்டசபை வட்டாரம் கூறியது.

அரசியல் சூழ்நிலை, பொதுப் பிரச்சினைகள், சட்டம் ஒழுங்கு என பல குற்றச்சாட்டுக்களின் நடுவில் கூடும் இந்தக் கூட்டத் தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.