ரூ.3,500 மாத ஊதியத்தில் பரிதவிக்கும்அரசு பள்ளி துப்புரவு பணியாளர்கள்

விருதுநகர்:அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளாக பணி புரியும் 3,000 துப்புரவு பணியாளர்கள், ரூ. 3,500 ஊதியத்தில் குடும்பம் நடத்த முடியாமல் பரிதவிக்கின்றனர்.தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2012 நவ., 11 ல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் துப்புரவு பணியாளர் 3,000 பேர், இரவு காவலர் 2,000 பேர் நியமிக்கப்பட்டனர். 
 
                     தமிழ், ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும் என்ற தகுதியில் பணி வழங்கப்பட்டது.துப்புரவு பணியாளர்களை முழுநேர பணியாளர் எனக் கூறி சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கினர். அதன்படி மாதம் ரூ. 3,500 ஊதியம் பெறுகின்றனர். இந்த ஊதியத்தில் குடும்பம் நடத்த முடியாததால் 200 க்கும் மேற்பட்டோர் வேறு பணி சென்றுவிட்டனர்.பணியில் இருப்போரில் உயர் கல்வி படித்தவர்களுக்கு பணி வரன்முறை செய்யாததால் பதவி உயர்வு பெற முடியவில்லை. வேலைவாய்ப்பு பதிவும் ரத்து செய்யப்பட்டதால் வேறு பணிக்கும் செல்ல முடியவில்லை.

இவர்களுக்கு பணிப் பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவர்களின் தகுதியுடன் இவர்களுடன் பணிக்கு சேர்ந்த இரவு காவலருக்கு ஊதியமாக ரூ. 13,500 வழங்கப்படுகிறது. எனவே தங்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என, முதல்வர், கல்வி அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளனர்.