ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் குவித்த ரோகித் சர்மா உலக சாதனை படைத்தார்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் குவித்த இந்திய வீரர் ரோகித் சர்மா உலக சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா, சேவாக்கின் உலக சாதனையை முறியடித்துள்ளார்.



இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கட்டாக், ஆமதாபாத், ஐதராபாத்தில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களிலும் மிக எளிதாக வெற்றிகளை குவித்த இந்திய அணி தொடரை கைப்பற்றியதுடன் 3–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா–இலங்கை இடையிலான 4–வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்து விளையாடியது. இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 404 ரன்கள் குவித்து, இலங்கை அணிக்கு 405 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா 151 பந்துகளில் 25 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் இரட்டை சதத்தை கடந்தார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் 209 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.


இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா இதுவரையில் யாரும் எட்டிராத வகையில் 264 ரன்கள் அடித்தும் சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே இந்திய வீரர்கள் சச்சின் தெண்டுல்கர்(200*), வீரேந்திர சேவாக்(219) இரட்டை சதம்
அடித்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் இதுவரையில் இரட்டை சதம் அடித்துள்ள 3 பேருமே இந்தியர் ஆவர். ஆட்டம் முடிவில் அவுட் ஆன ரோகித் சர்மா 264 ரன்கள் எடுத்து இருந்தார். ரோகித் சர்மா 173 பந்துகளில், 33 பவுண்டரிகளும், 9 சிக்சர்களும் விளாசினார். இந்திய அணியில் அதிகப்பட்சமாக கோலி 66 ரன்களும், ரெகானே 28 ரன்களும் அடித்தனர். ராயுடு 8 ரன்னிலும், ரெய்னா 11 ரன்னிலும் அவுட் ஆனார்கள். உதப்பா 16 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

264 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 250 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.