கணினிப் பயிற்றுநர் நேரடி நியமனம்: பதிவு மூப்பு பட்டியல் இன்று வெளியீடு - டிசம்பர் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு

கணினிப் பயிற்றுநர் நேரடி நியமனத்துக்கு தகுதி வாய்ந்தவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புப் பட்டியலை சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சனிக்கிழமை வெளியிடுகிறது. தமிழக பள்ளி கல்வித் துறையில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் நேரடி
நியமன முறையில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
இதற்காக, பி.எஸ்.ஸி., பி.எட்., கணினி அறிவியல், பி.சி.., பி.எட். முடித்த குறைந்தபட்சம் 18 முதல் 57 வயது வரை உள்ளவர்களின் பதிவு மூப்புப் பட்டியல் வேலை வாய்ப்பு அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் வெளியிடப்படும் பதிவு மூப்புப் பட்டியலில் தங்களின் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை தகுதியானவர்கள் பார்த்துக்கொள்வது அவசியம்.
அதில், ஏதாவது குறைகள் இருக்குமானால், டிசம்பர் 12-ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
இந்த நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் தகுதியானவர்களுக்கு தனித் தனியாக அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலும் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.