உபரி ஆசிரியர்கள் விவரங்களை டிசம்பர் 10-க்குள் அளிக்க உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் குறித்த விவரங்களை டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தைப் பின்பற்றி ஆசிரியர் நியமனம் செய்யப்படுகிறது.
அதேபோல், 2014-15-ஆம் ஆண்டு ஆசிரியர்களின் எண்ணிக்கையும் செப்டம்பர் 1-ஆம் தேதி மாணவர்களின் வருகையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. அதற்காக, அரசு உதவி பெறும் அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரப்படி, உபரி ஆசிரியர் விவரங்களைத் தயாரிக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.