மத்திய கல்வித்துறை திடீர் முடிவு சி.பி.எஸ்.இ 10ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு?

மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.  

       மத்திய பள்ளிக் கல்வி வாரிய(சிபிஎஸ்இ) பள்ளிகள் தென் மண்டலத்தில் 500 பள்ளிகள் இயங்கி வருகின்றன.  தமிழகத்தில் 150 பள்ளிகள் இயங்கி வருகின்றன.தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின்(என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் இந்த பள்ளிகள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் மாணவ மாணவியர்  12ம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வந்தனர். இந்நிலையில், கடந்த முறை மத்திய பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த கபில்சிபல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தேவையில்லை என்று தெரிவித்ததின் பேரில் கடந்த 2011ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை சிபிஎஸ்இ ரத்து செய்தது.  மேலும், உயர்கல்விக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் தேவைப்பட்டால் தேர்வு எழுதலாம் என்று அறிவித்தது. 

         இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டனர். இந்நிலையில், ஆண்டு பொதுத் தேர்வு எழுதாமல் போனால் அது மாணவர்களின் உயர்கல்வியை பாதிக்கும் என்றும், பொதுத் தேர்வு முறையே சிறப்பானது என்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இப்போது கருதுகிறது. இதையடுத்து மீண்டும் பழைய முறைப்படியே சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு முறையை கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்து வருகிறது. அதனால் இந்த ஆண்டே சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆண்டுப் பொதுத் தேர்வை எழுத வேண்டி வரும். இதற்கான அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வெளியிடும் என்று தெரிகிறது.