10, 12ம் வகுப்பு பாடங்களை டிசம்பர் முதல் வாரத்ததிற்குள் முடிக்க உத்தரவு

பத்து மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான மொத்த பாடத்திட்டங்களையும் டிசம்பர் முதல் வாரத்ததிற்குள் முடிக்குமாறு கல்வித்துறை கட்டாயப்படுத்துவதால் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டம் வந்தபின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் அச்சிட்டு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை பொதுத் தேர்வாக நடத்தும் முறை இரண்டு ஆண்டுகளாக அமலில் உள்ளது.

         தற்போது டிச.10ம் தேதி பிளஸ்2வுக்கும், 12ம் தேதி பத்தாம் வகுப்புக்கும் அரையாண்டு தேர்வு துவங்குகிறது. இதனால், டிச.7க்குள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மொத்த பாடங்களையும் நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.சில பள்ளிகளில் காலிப் பணியிடம்,
உடல்நல பாதிப்பு, கர்ப்ப கால மருத்துவ விடுப்பு போன்ற காரணங்களால் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஜூன் மாதம் பள்ளி துவங்கிய நிலையில், டிசம்பர் முதல் வாரத்துக்குள் ஆறே மாதங்களில் முழு பாடங் களையும் நடத்தி முடிப்பது ஆசிரியர்களுக்கு சிரமமாக உள்ளது. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இயந்திரகதியில் வேகமாக பாடங் களை நடத்தி முடிப்பதாக மாணவர்கள் மத்தியில் புகார் நிலவுகிறது.இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “அரையாண்டு தேர்வுக்கு முன்னதாக பத்தாம் வகுப்பு, பிளஸ்2 வகுப்புக்கு மொத்த பாடங்களை முடித்தால் மட்டுமே,
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அவர் களை திருப்பு தேர்வு, முன்மாதிரி தேர்வு நடத்தி, பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த முடியும். அவகாசம் குறைவாக உள்ளதால், காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் என கூடுதல் நேரம் வகுப்பு நடத்தப்படுகிறது.சில நேரங்களில் பாடங்களை விரைவாக நடத்த வேண்டிய நெருக்கடியும் ஆசிரியர்களுக்குஏற்படுகிறது. காலாண்டு தேர்வுக்குள் 65 சதவீதம், அரையாண்டு தேர்வுக்குள் 35 சதவீதம் என கல்வித்துறையின் அட்டவணையை பின்பற்றினால், இந்த சிரமம் ஏற்படாது’’ என்றார். குறைந்தபட்சம் 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு மட்டுமாவது ஆசிரியர்கள் பற்றாக்குறை யின்றி நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.