TNPSC: இளநிலை உதவியாளர் பணிக்கான கலந்தாய்வு சென்னையில் 29-ந்தேதி தொடங்குகிறது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையம் சார்பில் நடத்தப்பட்ட இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு 29-ந்தேதி தொடங்குகிறது.

                இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இளநிலை உதவியாளர் பணி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 4-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3, 2013-2014-ம் ஆண்டு பதவிகளுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்டு 25-ந்தேதி நடைபெற்றது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவிகளுக்கு உரித்த காலிப்பணியிடங்களுக்கான முறையே, 4, 3 மற்றும் 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு வரும் 29-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதி வரை சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் காலை 10 மணியிலிருந்து சான்றிதழ் சரிபார்ப்பும், காலை 8½ மணியிலிருந்து கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

தமிழ் வழியில் படிப்பு

இது குறித்த விவரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விவரங்களை, தேவைப்பட்டால் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது மூலச் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பமிடப்பட்ட நகல் சான்றிதழ்கள் அனைத்தையும் கலந்தாய்வுக்கு வரும்போது தவறாமல் கொண்டு வர வேண்டும்.

கணினி வழி விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு படிப்பை தமிழ் வழி மூலம் பயின்றுள்ளதாக உரிமம் கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் பயின்ற பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியையிடமிருந்து பத்தாம் வகுப்பு தமிழ் வழி மூலம்தான் பயின்றுள்ளார் என சான்றிதழ் பெற்று கலந்தாய்வுக்கு வரும்போது கண்டிப்பாக எடுத்துவர வேண்டும். இச்சான்றிதழ், அவர் விண்ணப்பிக்கும் போது, தமிழ் வழியில் பயின்றார் என குறிப்பிட்டிருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

காலிப்பணியிடம்

சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் தகுதிபெறும் பட்சத்தில், அதனைத் தொடர்ந்து மறுதினம் நடைபெறும் கலந்தாய்விற்கு தர வரிசைப்படி அனுமதிக்கப்பட்டு இட ஒதுக்கீட்டு விதி மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுவர்.

விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வுக்கு பரிசீலிக்கப்படும்போது உள்ள காலிப்பணியிடங்களைப் பொறுத்தே அனுமதிக்கப்படுவர். எனவே, கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.

அனுமதி இல்லை

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரரும், தேர்வாணைய இணையதளத்தில் ஒவ்வொரு கலந்தாய்வு தின முடிவிலும் வெளியிடப்படும் இனவாரியான எஞ்சியுள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய செய்தியினை ஆய்ந்து உறுதி செய்து அவரவர் பிரிவில் காலி பணியிடங்கள் இருந்தால் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட நாளில் கலந்து கொள்ள வேண்டும்.


விண்ணப்பதாரர்கள் தவிர அவர்களுடன் வரும் நபர்கள் எவரும் தேர்வாணைய அலுவலக வளாகத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கைக்குழந்தையுடன் வரும் பெண் விண்ணப்பதாரர்களுடன் ஒரு நபரும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுடன் ஒரு நபரும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.