அங்கீகாரத்தை அக்டோபர் 31க்குள் புதுப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு கெடு

சென்னை: தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள், தங்களது தொடர் அங்கீகாரத்தை வரும் 31ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பள்ளி பொதுத்தேர்வு மாணவரின் தேர்வு எழுதுவதற்கான அனுமதி, ரத்து செய்யப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

விதிமுறைகள்: கடந்த 2004ம் ஆண்டு கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. தனியார் பள்ளிகள் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்த பரிந்துரையை, கமிஷன், அரசிடம் சமர்பித்தது.
அதை ஒவ்வொரு கல்வியாண்டும் தனியார் பள்ளிகள் (மெட்ரிக் மாநிலக்கல்வி திட்டம் ஆங்கிலோ இந்தியன் திட்டம்) தொடர் அங்கீகாரம் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி வருவாய் துறையினரிடம் இருந்து கட்டட உரிமைச் சான்று, அங்கீகரிக்கப்பட்ட கட்டட இன்ஜினியரிடம் இருந்து கட்டட உறுதிச் சான்று, சுகாதரத்துறையிடம் இருந்து சுகாதாரச் சான்று, தீயணைப்பு துறையிடம் இருந்து தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு என நான்குவகை சான்று பெற வேண்டும்.
போதுமான கழிப்பறை: தொடர் அங்கீகாரம் பெறுவதற்காக, 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் சம்பத் கமிஷன் பரிந்துரை செய்த 14 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதில், வகுப்பறையில் ஒன்றுக்கு மேற்பட்ட கதவு இருக்க வேண்டும். தூய்மையான குடிநீர் போதுமான கழிப்பறை விளையாட்டு மைதானம் சுற்றுச்சுவர் இரண்டு தளம் கட்டடம் மட்டும் இருக்க வேண்டும்.
பள்ளிக்கூட வாயில் நெடுஞ்சாலையில் இருக்க கூடாது. குளம் மற்றும் காடுகளுக்கு பக்கத்தில் இருக்க கூடாது. எந்த தளத்தில் இருந்தும் இரண்டரை நிமிடத்தில் வெளியேற வசதி இருக்க வேண்டும். 16 படிகளுக்கு மேல் இருக்க கூடாது. மூன்றாம் வகுப்பு வரை தரைத்தளத்தில் இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்நிலையில், நடப்பாண்டு, பள்ளிகளின் தொடர் அங்கீகாரம் புதுப்பித்தல் தொடர்பான விவரங்களை மாநில தேர்வுத்துறை இயக்குனரகம் தயார் செய்து வருகிறது. அதில் பெரும்பாலான பள்ளிகள் தங்களது அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. அதனால், வரும் 31ம் தேதிக்குள் தொடர் அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளது.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது: கட்டடம் தொடர்பான நான்கு வகை சான்று புதுப்பித்தல், சம்பத் கமிஷன் பரிந்துரை சான்று உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வரும் 31ம் தேதிக்கு ஒப்படைத்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு சில பள்ளிகள் மட்டுமே புதுப்பித்துக் கொண்டுள்ள நிலையில், தேர்வுத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டுமானால், பள்ளியின் தொடர் அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வரும் 31ம் தேதிக்கு பின்னர் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர் பொதுத்தேர்வு எழுதுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அவகாசம்: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் கோவிந்தராஜ் கூறியதாவது: சில தனியார் பள்ளிகள் தொடர் அங்கீகாரம் புதுப்பித்தல் செய்யாமல் உள்ளன. கல்வித்துறை சார்பாக கெடு தேதி விதிக்கப்பட்டு நோட்டீஸ் விடப்படும். அதன்பின் கல்வி நிறுவனத்தினருக்கு ஒரு மாதம் வரை அவகாசம் கொடுக்கப்படும். சில பள்ளிகளில் நிலம் மற்றும் கட்டட வரையறை தொடர்பாக பிரச்னை இருக்கிறது. எப்படியாக இருந்தாலும் விதிமுறைக்கு உட்பட்டு தொடர் அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்னையை சந்தித்துதான் ஆக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.