பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டு குறுந்தகடு வெளியீடு

பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டு குறுந்தகடுகளை சென்னையில் ஆளுநர் ரோசய்யா வியாழக்கிழமை வெளியிட்டார். பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வினா வங்கிகள், உயர்கல்வி வாய்ப்புகள், வங்கிக் கடன் வாய்ப்புகள் போன்ற தகவல்கள் அடங்கிய குறுந்தகடை "டிரீம் சொலுஷன்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள இந்தக் குறுந்தகடை தமிழக ஆளுநர் ரோசய்யா வெளியிட்டு பேசியது:

தற்போது கல்வி முறை பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. மாணவர்கள் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமில்லாமல், பெற்றோரிடமும் தேர்வு பயம் தொற்றிக்கொள்கிறது.

எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி படிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

தங்களது பிள்ளைகள் எதைப் படிக்க வேண்டும் என்பதை பெற்றோர் திணிக்கக் கூடாது.

மாணவர்களே அதனை தேர்வு செய்ய வேண்டும். இப்போது வெளியிடப்பட்ட குறுந்தகடு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார் ஆளுநர்.

இந்த குறுந்தகடு குறித்து டிரீம் சொலுஷன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் கூறியது:

தேர்வுக்கு மாணவர்கள் தயாராக உதவும் பல்வேறு தகவல்கள் இந்தக் குறுந்தகடில் உள்ளன.

மேலும், அவர்கள் பிளஸ் 2 படித்து முடித்தவுடன் எந்தவிதமான உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கலாம், அந்தப் படிப்புகள் எந்தக் கல்லூரியில் உள்ளது என்பன போன்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், கல்விக் கடன் பெறுவதற்கு உதவும் தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தக் குறுந்தகடுகள் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வெழுதவுள்ள அனைவருக்கும் இலவசமாக கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரிமா சங்கம், வாசவி கிளப் ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து குறுந்தகடுகளை விநியோகிக்கும் பணி ஜனவரி மாதம் தொடங்கும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் "டிரீம் சொலுஷன்ஸ்' நிறுவனம், அரிமா சங்கம், வாசவி கிளப் ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.