1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2ம் பருவ பாட புத்தகங்கள் அக்.6ம் தேதி விநியோகம்

 அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:


        தமிழகத்தில் 2014-2015ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 9ம் வகுப்பு வரை 2ம்பருவத்திற்கான இலவச பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், இலவச சீருடைகள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் கல்வி மாவட்ட வாரியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு இன்று முதல் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

           அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு தேவையான இலவச பாட புத்தகங்களை மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து பெற்று பள்ளிகளில் பாதுகாப்பாக வைத்து காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளான அக். 6ம் தேதி அன்று மாணவர்கள் வசம் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் இலவச சீருடை வழங்கப்பட வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களும் இப்பணியில் காலதாமதமின்றி விரைவு நடவடிக்கை எடுத்துள்ளார்களா என்பதை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது