மன உளைச்சலால் ஆசிரியர் பயிற்றுநர் மயக்கம்: முதன்மைக் கல்வி அலுவலர் மீது `உங்கள் குரலில்' புகார்-Hindu Tamil

அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் விளக்கம்கேட்டு மன உளைச்சல் ஏற்படுத்தியதால் ஆசிரியர் பயிற்றுநர் மயங்கி விழுந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதுபோல், முதன்மை கல்வி அலுவலரின் பழிவாங்கும் நடவடிக்கையால் மன உளைச்சல்
அடைந்து வருவதாக “உங்கள் குரலில்' ஆசிரியர் பயிற்றுநர்கள் புகார் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 16 வட்டார வளமையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 167 ஆசிரியர் பயிற்றுநர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் பள்ளிகளை மேற்பார்வையிடுவது, ஆசிரியர்களுக்கு பயிற்சி, பள்ளி கட்டிட வசதிகள், மானிய உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இவர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் இருந்து, மாதந்தோறும் ஊதியம் வழங்கப் படுகிறது. சில மாதங்களாக அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், ஊதியப் பட்டியலில் கையெழுத்து போடாமல் இழுத்தடிப்பதால் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒவ்வொரு மாதமும், தாமதமாக ஊதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் வழங்கப் படுவதாகவும், திங்கட்கிழமை முதன்மை கல்வி அலுவலர் முருகன், விளக்கம் கேட்டு மனஉளைச்சல் ஏற்படுத்தியதால் ஆசிரியர் பயிற்றுநர் ஒருவர் மயங்கி விழுந்துதிண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக “உங்கள் குரலில்' ஆசிரியர் பயிற்றுநர்கள் புகார் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் ஆசிரியர் பயிற்றுநர்களை சந்தித்து விசாரித்தபோது அவர்கள் கூறியது:அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கும் மாதத் தொடக்கத்தில் தாமதமில்லாமல் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் மட்டும் ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெறுவதற்கு போராட வேண்டி உள்ளது. காரணம் கேட்கும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் ஏதாவது ஒரு வகையில் தவறுகள் கண்டுபிடித்து மெமோ கொடுக்கிறார்.இவரது பழிவாங்கும் நடவடிக்கையால் 3 மாதம் ஊதியமே பெறாத ஆசிரியர் பயிற்றுநர் ஒருவர் தவித்து வந்தார். அவரை மேலும் மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில் விளக்கம்கேட்டுள்ளார். ஏற்கெனவே, ஊதியமே பெறாமல் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்த அவர், இவரது நெருக்கடியால் மயங்கி கீழே விழுந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டு தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ளார். இவரைப்போல், அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒவ்வொரு விதங்களில் முதன்மைக் கல்வி அலுவலரின் பழிவாங்கும் நட வடிக்கையால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தவிக்கிறோம் என்றனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகனிடம் கேட்டபோது அவர் கூறியது: யாருக்கும் இன்று (நேற்று) நான் மெமோ வழங்கவில்லை. நீங்கள் குறிப்பிட்ட ஆசிரியர் பயிற்றுநரிடம், அவரது வட்டாரத்துக்கு உட்பட்ட சில விவரங்கள் குறித்து அறிக்கை மட்டும் கேட்டேன். மற்றபடி யாரையும் நான் தொந்தரவு செய்யவில்லை. திட்டமிட்டு மெமோ வழங்குவதும் இல்லை. யாரோ திட்டமிட்டு பொய் புகாரைத் தெரிவித்துள்ளனர். அது முழுக்க பொய்யான தகவல். நிதி வராததால் ஊதியம் தாமதமாகி இருக்கும். நிதி வந்ததும் ஊதியத்தை நிறுத்தி வைக்காமல் போட்டுவிடுவோம் என்றார்.