கல்வி நிறுவன கட்டடங்களுக்கு ‘சீல்’? உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

கல்லூரி, பள்ளி கட்டடங்களுக்கு, ’சீல்’ வைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுக்களுக்கு, ’தற்போதைய நிலை தொடர வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம், இடைக்கால உத்தரவிட்டு உள்ளது.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகில் உள்ள, தொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள, விஸ்வ பாரதி கல்வியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரூர் தாலுகாவில் உள்ள, மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்:

கல்வி நிறுவனங்கள் கட்டடங்கள் தொடர்பாக, உரிய அதிகாரியின் ஒப்புதலுக்கு, ஆக., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கட்டடங்கள் மூடப்பட்டு, ’சீல்’ வைக்கப்படும் என்றும், தர்மபுரி, நகர் மற்றும் ஊரமைப்பு துணை இயக்குனர், ’நோட்டீஸ்’ அனுப்பி உள்ளார். நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தில், கொண்டுவரப்பட்ட புதிய பிரிவு, 2011, ஜனவரியில், அமலுக்கு வந்தது. இந்த பிரிவின்படி, கட்டட அனுமதி வழங்குவதற்கு முன், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனரிடம், உள்ளாட்சி அமைப்பு, முன் அனுமதி பெற வேண்டும்.

எங்கள் கல்வி நிறுவனங்களின் கட்டடங்கள், 2010ம் ஆண்டுக்கு முன், கட்டப்பட்டு விட்டது. உள்ளாட்சி அமைப்பின் திட்ட ஒப்புதல் பெற்ற பின் தான், கட்டடங்கள் கட்டப்பட்டன. எனவே, நகர் மற்றும் ஊரமைப்பு துணை இயக்குனரின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுக்களில் கூறப்பட்டுள்ளன.

இதே போன்று, ஐந்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை, நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், ரவிச்சந்திரபாபு அடங்கிய, ’டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.சந்திரன், முத்துகுமாரசாமி, வழக்கறிஞர்கள் ஆர்.நடராஜன், கந்தன் துரைசாமி, கே.செல்வராஜ் ஆகியோரும்; அரசு தரப்பில், சிறப்பு அரசு பிளீடர் ஸ்ரீஜெயந்தியும் ஆஜராகினர்.

மனுக்களை விசாரித்த, ’டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:

உரிய அதிகாரியிடம் திட்ட அனுமதி பெற்று, அதன்படி, கட்டடங்கள் கட்டப்பட்டதாக, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் தரப்பு ஆட்சேபனைகளை, மனுதாரர்கள் அளிக்கலாம்.

நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனர் உத்தரவின் அடிப்படையில், துணை இயக்குனர், ’நோட்டீஸ்’ மற்றும் உத்தரவுகளை அனுப்பி உள்ளார். இந்த விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனரிடம், தெளிவான விளக்கத்தை, துணை இயக்குனர்கள் பெற வேண்டும். அதன்பின், நான்கு வாரங்களுக்குள், துணை இயக்குனர்கள், சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

ஒரு வாரத்துக்குள், தங்கள் தரப்பு ஆட்சேபனைகளை, கல்வி நிறுவனங்கள் தாக்கல் செய்யலாம். அந்தந்த மண்டல துணை இயக்குனர்கள், புதிய உத்தரவுகள் பிறப்பிக்கும் வரை, கட்டடங்கள் விவகாரத்தில், தற்போதைய நிலை தொடர வேண்டும். இவ்வாறு, ’டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.