சிவில் சர்வீஸ் தேர்வில் ஆங்கில மதிப்பெண் சேர்க்கப்படாது.

சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 2011ல் சிசாட் எனப்படும் திறனறி தேர்வுபாடத்திட்டம் சேர்க்கப்பட்டது. இதில் ஆங்கில மொழி புரியும் திறனை சோதிப்பதற்கான கேள்விகள் கடினமாக இருப்பதால், மாநில மொழிகளில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளதாக குற்றம்
சாட்டப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் 2ம் தாளில் உள்ள ஆங்கில மொழி திறனறி கேள்விகளுக்கான மதிப்பெண்கள்,தேர்வு எழுதுவோரின் மொத்த மதிப்பெண்ணில் (கிரேடு அல்லது மெரிட்) சேர்க்கப்படாது என மக்களவையில் அமைச்சர் ஜித்தேந்தர் சிங் அறிவித்தார்.

இந்நிலையில் மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வின் முதல் தாள் மற்றும் 2ம் தாளில் பெறப்படும் மதிப்பெண்களில், ஆங்கில மொழிக்கான மதிப்பெண்களை கழித்தபின், மொத்த மதிப்பெண் (கிரேடு) கணக்கிடப்படும். ஆங்கில மொழிக்கான கேள்விகள் 10ம் வகுப்பு அளவிலேயே இருக்கும். அதற்கான மதிப்பெண்கள் கணக்கிடப்படாது என்பதால், அதற்கு தேர்வு எழுதுபவர்கள் பதில் அளிக்கத் தேவையில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.