அதிகம் டி.வி. பார்ப்பவரா நீங்கள்? இதைப் படியுங்கள்!

  அதிகமாக டி.வி., பார்ப்பவர்கள், ஆயுள் குறைந்து, சீக்கிரமாக இறந்து விடுவார்கள் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. டிவி பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

        வாழ்வில் உற்சாகம் தரும் ஒவ்வொரு பொருளும் நமது உடல் நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு டிவி மட்டும் விதிவிலக்கல்ல. பொழுதுபோக்கு அம்சமாக நினைத்து அனைவரும் விரும்பிப் பார்க்கும் டிவி, உடல்நிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

டிவி மனிதர்களின் வாழ்விலும், உடல்நிலையிலும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் மூலம், அதிகம் டிவி பார்த்தால் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் 25 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், நீங்கள் டிவி பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் உங்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை இழக்கிறீர்கள் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பெரும்பாலானவர்கள் படுத்துக் கொண்டே டிவி பார்க்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், சில வகையான புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றனவாம். இதன் விளைவாக இளம்வயதில் மரணமும் ஏற்படுகிறதாம்.

பேகர் ஐடிஐ ஹார்ட் மற்றும் டையபட்டிஸ் இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த உடலியல் செயல்பாடு குறித்த ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரிகிட் லின்ச் கூறுகையில், "உடல் உழைப்பு குறைவது மனிதனின் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும்; உடல் உழைப்பு இல்லாமல் போவதே இத்தகைய பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு காரணம்; நீங்கள் நிற்கவோ அல்லது நடக்கவோ இல்லாமல் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தோ அல்லது படுத்துக் கொண்டோ இருப்பதால் உங்களுக்கு குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது; ஒரு நாளின் அதிக மணி நேரங்கள், வாரத்தின் அதிக நாட்கள், வருடத்தின் அதிக வாரங்கள் என தொடர்ந்து நீங்கள் உடல் உழைப்பே இல்லாமல் இருக்குறீர்கள்; இவை அனைத்து சேர்ந்து உங்களின் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது; உடல் எடை அதிகமானதாலும் உங்களால் அதிக தூரம் நடக்கவோ, அதிக நேரம் நிற்கவோ முடியாத நிலை ஏற்படுகிறது; இதன் காரணமாகவும் உடல் உழைப்பு குறைந்து குறைவான ஆற்றலே உங்கள் உடலுக்கு தேவைப்படுகிறது;

உடல் தசைகள் வேலையின்றி சும்மாவே இருப்பதால், தசைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் என்சைம்களின் அளவு குறைய துவங்குகிறது; இது பல ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது; இந்த என்சைம்கள் தான் உங்களின் உடலில் ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி ஒரே சீராக வைக்க உதவுகின்றன; நீங்கள் உட்கார்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும் போதும், உங்களின் கை, கால்கள், முதுகெழும்புகள் என அனைத்தும் முற்றிலும் ஓய்வில் இருக்கும்; எழும்புகள் தான் நமது உடலை செயல்பட வைக்க உதவுகிறது என்பது அனைவரும் அறிந்ததுதான்; நீங்கள் ஓடிக்கொண்டோ அல்லது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது உங்களின் உடலில் ரத்தத்தில் உள்ள குளுகோஸ் உற்பத்தி,அதன் செயல்பாடு அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்; உடல் உழைப்பு இல்லாமல், உடல் உறுப்புக்கள் தொடர்ந்து ஓய்வில் இருந்து கொண்டே இருப்பதால், காலப்போக்கில், அவைகள் மெல்ல மெல்ல தனது செயல்பாட்டை இழக்கின்றன" என்று அவர் தெரிவித்துள்ளார்.