பயிற்சி ஆசிரியர், முதல்வர் இன்றி தள்ளாடும் அரசு ஐ.டி.ஐ.,க்கள்.

திறம் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.,), முதல்வர், பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், திணறி வருகின்றன.

ஆர்வம்

தமிழகத்தில், உயர்கல்விக்கு வாய்ப்பில்லாத மாணவர்கள், தொழிற் கல்வி பயில, 72 இடங்களில், ஐ.டி.ஐ.,க்களை அரசு துவங்கி, பயிற்சி அளித்து வருகிறது. இங்கு பயிற்சி பெற்றோர், அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். எளிதாக வேலை கிடைப்பதால், இந்த படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதற்கேற்ப, 'ஐ.டி.ஐ.,க்களில் தேவை யான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்' என, அரசு அறிவித்துள்ளது.ஆனால், பெரும்பான்மையான ஐ.டி.ஐ.,க்கள் முதல்வர் இல்லாமலும், பயிற்சி ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லாமலும் திணறி வருகின்றன.

இதுகுறித்து, பயிற்சி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:மொத்தமுள்ள, 72 ஐ.டி.ஐ.,க்களில், 30 ஐ.டி.ஐ.,க்களில் முதல்வர் பணி இடங்கள் காலியாக உள்ளன. ஒரு முதல்வர், இரண்டு கல்லூரிகளை சேர்த்து கவனிக்கும் நிலை உள்ளது. மாணர்வர் சேர்க்கையை இவர்கள் தான் கவனிக்க வேண்டும்.இதுபோன்று, 70க்கும் மேற்பட்ட பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், திறம் வாய்ந்த இளைஞர்களை உருவாக்குவதில் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்க உள்ள நிலையில், காலியாக உள்ளஇந்த பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். அப்போது தான், ஐ.டி.ஐ.,க்கள் திறம்பட செயல்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

புலம்பல்

மேலும், பணியிடங்கள் நிரப்பாததால், ஐ.டி.ஐ.,க்களில் பணியாற்றுவோர், பதவி உயர்வு இன்றி, ஓய்வுபெறும் நிலை உள்ளதாகவும், அலுவலர்கள் புலம்புகின்றனர்.பயிற்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணி மூப்பு பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில், காலி இடங்கள் நிரப்பப்படும்' என்றார்.