தற்போதைய நிலையே தொடர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் ஒப்புதல் இன்றி, பேராசிரியர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக தாக்கலான வழக்கில், தற்போதைய நிலை தொடர, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

         மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்கள் ராஜராஜன் உட்பட 7 பேர் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜ் பல்கலையில் ஜூன் 16 ல் சிண்டிகேட் கூட்டம் நடந்தது. ஆசிரியரல்லாத பணியிடம் (பொருள் 33) மற்றும் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை (பொருள் 34) நிரப்புவது பற்றி, கூட்டத்தில் ஒப்புதல் பெறுவதற்கான பொருள் பட்டியலில் (அஜண்டா) குறிப்பிடவில்லை. கூட்டம் முடிந்தபின், அவற்றை இணைத்து ஒப்புதல் பெற்றதாக தெரிவித்தனர். இதற்கு பதிவாளரிடம் எதிர்ப்புத் தெரிவித்தோம்.

           பின், 26 உதவி பேராசிரியர்கள், 9 இணைப் பேராசிரியர்கள் நியமனம் நடந்தது. துணைவேந்தரின் உத்தரவின்படி, பதிவாளர் பணி நியமனம் வழங்கியுள்ளார்.

உதவி மற்றும் இணைப் பேராசிரியர்கள் நியமனம் முறையாக நடக்கவில்லை. இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. பொருள் 33 மற்றும் 34 க்கு சிண்டிகேட் ஒப்புதல் வழங்கவில்லை. கூட்டத்தில் விவாதிக்கவில்லை. இவ்விரு தீர்மானங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்களை, திரும்பப்பெற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி கே.கே.சசிதரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜரானார்.

நீதிபதி உத்தரவு: பணி நியமனங்களைப் பொறுத்தவரை, தற்போதைய நிலை தொடர வேண்டும். நியமனங்கள், இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து அமையும். ஜூலை 31 க்கு ஒத்திவைக்கப்படுகிறது.