பி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா? இடைநிலை ஆசிரியர்கள் பகீர் புகார்

  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பி.எட்., படிக்கும் இடைநிலை  ஆசிரியர்களுக்கு, 40 நாள் வகுப்பறை பயிற்சிக்கு செல்ல அனுமதியளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
         சேலம் மாவட்டத்தில், 1,400க்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் ப்ளஸ் 2 முடித்து, இரண்டாண்டு ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்த நிலையில், பணியில் நியமிக்கப்படுகின்றனர்.
 
         இவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற, பி.எட்., படிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக உள்ளவர்களுக்கு, பட்டப்படிப்பு முடித்த நிலையில், பி.எட்., படிப்பை தபால் வழியில் அண்ணாமலை பல்கலை உள்ளிட்ட பல்கலை வழங்குகின்றன. இதில், 40 நாள் வகுப்பறை பயிற்சியும் அவசியம்.
 
          இதற்காக அரை நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு, இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அனுமதி வழங்க வேண்டும். இக்கல்வியாண்டில், இதுவரை எந்த ஆசிரியருக்கும் அனுமதி வழங்காமல், மறுத்து வருவதாகவும், இதனால், தங்களது பதவி உயர்வுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
 
இதுகுறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் (பொறுப்பு) உஷா கூறியதாவது:
 
          கல்வியாண்டு துவக்கத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட முக்கிய பணி உள்ளன. அதுமட்டுமில்லாமல், ஈராசிரியர் பள்ளியில் உள்ள ஆசிரியர், 40 நாள் வரை விடுப்பில் செல்லும் பட்சத்தில், அங்கு கற்றல் பணி பாதிக்காமல் இருக்க மாற்றுப்பணி ஆசிரியர் நியமிக்க வேண்டும். கல்வியாண்டின் துவக்கத்தில் இதுபோன்ற சிக்கல் வரும் பட்சத்தில், மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் முதல், அனைத்து பி.எட்., படிக்கும் ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்படும், என்றார்.