டூவீலரில் வரும் மாணவர்கள் விபத்தில் சிக்கினால் தலைமை ஆசிரியரே பொறுப்பு

காரைக்குடி: ஓட்டுனர் உரிமம் இல்லாமல், பள்ளிகளுக்கு மாணவர்கள், டூவீலர்களில் வரக்கூடாது.மீறி வந்து அவர்கள் விபத்தில் சிக்கினால்,சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரே பொறுப்பாவார் என,என பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில்,'அனைத்து பள்ளிகளிலும்,பள்ளி மாணவ, மாணவிகள், முறையாக ஓட்டுனர் உரிமம் பெறாமல், பள்ளிக்கு டூவீலரில் வருவதால்,பல்வேறு விபத்துக்களும், உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருவதாக,புகார் எழுந்துள்ளது. எனவே,முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, மாணவ, மாணவிகள் டூவீலரில் ஓட்டி வருதல் கூடாது, என தெரிவிக்க வேண்டும். அவ்வாறு மாணவர் யாரும் வந்தால், அவர்கள் வாகனத்தின் சாவியை, தலைமை ஆசிரியர் எடுத்து வைத்து, மாணவரின் பெற்றோர் வந்த பிறகு அவர்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். மேலும், அடுத்த முறை அவர் வராதவாறு பெற்றோருக்கு அறிவுரை கூற வேண்டும். இதை மீறி, லைசென்ஸ் இன்றி டூவீலரில் பள்ளிக்கு வரும் மாணவர்கள்,விபத்தில் சிக்க நேர்ந்தால்,அதற்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்”, இவ்வாறு கூறியுள்ளார்.