சென்னை : 'வெளி மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்த
மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, ஆறு வகை சான்றிதழ்களை
அனுப்ப வேண்டும்' என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம்
தெரிவித்து உள்ளது.
மதிப்பீடு : ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில், ஆசிரியர்
பயிற்சிப் படிப்பை படித்த தமிழக மாணவர்கள், அம்மாநிலங்கள் வழங்கிய
சான்றிதழை, தமிழக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்திடம்
சமர்ப்பித்து, மதிப்பீடு செய்ய வேண்டும்.
இதன்பிறகே, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யவும்,
டி.இ.டி., (ஆசிரியர் தகுதித்தேர்வு) தேர்வை எழுதவும் முடியும். இந்த
வகையில், 2,000 பேர், தமிழக கல்வித் துறையிடம், மதிப்பீடு செய்ய
காத்திருக்கின்றனர். இந்நிலையில், வெளிமாநில சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய,
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி
நிறுவனம் அறிவித்துள்ளது.
நகல்களுடன்... : பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2
மதிப்பெண் சான்றிதழ், வெளி மாநிலங்கள் வழங்கிய, ஆசிரியர் பயிற்சி முதலாம்
ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பயிற்சி
பெற்றதற்கான சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ்
(டி.சி.,), 'கோர்ஸ் சர்ட்டிபிகேட்' ஆகியவற்றின் நகல்களை,
விண்ணப்பித்துடன் இணைக்க வேண்டும். மேலும், 500 ரூபாய் 'டிடி' மற்றும் வெளி
மாநில ஆசிரியர் கல்வித் துறை செயலர் பெயரில், 300 ரூபாய்க்கு, 'டிடி'
ஆகியவற்றுடன், 'இயக்குனர், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம்,
டி.பி.ஐ., வளாகம், கல்லூரி சாலை, சென்னை - 6' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க
வேண்டும்.