அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் என்ஜினீயரிங் இடங்கள் 50 சதவீதம் மட்டுமே நிரம்புகின்றன 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகக் கிடக்கின்றன


சென்னை, ஜூலை.30-அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு 4-ந் தேதி முடிவடைகிறது. என்ஜினீயரிங் இடங்கள் 50 சதவீதம் மட்டுமே நிரம்புகின்றன. கலந்தாய்வு முடிவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக் கிடக்கும் நிலைமை
உள்ளது.என்ஜினீயரிங் கலந்தாய்வுதமிழ்நாடு முழுவதும் உள்ள 541 என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பி.இ. சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த கலந்தாய்வுக்கு கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளிட்ட சமர்ப்பிக்கப்பட்ட இடங்கள் 2 லட்சத்து 4 ஆயிரத்து 79.அந்த இடங்களுக்கு கடந்த ஒரு மாதமாக பொது கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் வந்து கலந்தாய்வில் கலந்துகொண்டு மதிப்பெண் எடுத்ததற்கு ஏற்ற வகையில் கல்லூரியையும், பி.இ. படிப்பில் குரூப்பையும் தேர்ந்து எடுத்து செல்கிறார்கள்.முதல் இடம்மெக்கானிக்கல் பிரிவை 19 ஆயிரத்து 418 மாணவ-மாணவிகள் தேர்ந்து எடுத்துள்ளனர். இது கலந்தாய்வில் முதல் இடம் வகிக்கிறது. அடுத்து எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவு 2-வது இடத்தில் உள்ளது. அந்த பிரிவை 15 ஆயிரத்து 653 பேர் எடுத்துள்ளனர். சிவில் பிரிவை 12 ஆயிரத்து 262 பேர் தேர்ந்து எடுத்திருக்கிறார்கள்.இந்த கலந்தாய்வு 4-ந் தேதி முடிவடைகிறது. அன்று கட் ஆப் மதிப்பெண் 200-க்கு 77.5 வரை அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 26 பேர். அவர்களில் 37 ஆயிரத்து 619 பேர் வரவில்லை. இது 31.6 சதவீதம். கலந்தாய்வுக்கு வந்துவிட்டு இடத்தை தேர்ந்து எடுக்காதவர்கள் 324 பேர். கலந்தாய்வு இன்னும் 6 நாட்கள் தான் நடைபெற உள்ளன. 50 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பும் கலந்தாய்வு முடிகிற அன்று கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 4 ஆயிரத்து 79 இடங்களில் 50 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி இருக்கும். 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக்கிடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர பல கல்லூரிகளில் 1 அல்லது 2 மாணவர்களே சேர்ந்துள்ளனர்.ஆனால் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேராத சில கல்லூரிகளில், கல்வி கட்டணத்தை குறைப்பதால் நிர்வாக ஒதுக்கீட்டில் கணிசமான மாணவ-மாணவிகள் சேர்ந்ததாக கூறப்படுகிறது. கலந்தாய்வு 4-ந் தேதி முடிவடைந்தாலும் அதற்கு முன்பாகவே 1-ந் தேதி பெரும்பாலான என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குகின்றன.