பி.எட். படிப்பிற்கு விண்ணப்பிக்க 31-ந் தேதி வரை காலஅவகாசம் துணைவேந்தர் விஸ்வநாதன் அறிவிப்பு


சென்னை, ஜூலை.28-தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முதல் முறையாக இந்த வருடம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் உள்ள பி.எட். இடங்களில் மாணவ-மாணவிகளை
சேர்ப்பதற்காக கலந்தாய்வை நடத்த உள்ளது. இந்த கல்லூரிகளில் 300 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் சேர ஆன்லைன் மூலம் பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். இன்றுடன் (திங்கட்கிழமை) விண்ணப்பிக்கும் தேதி முடிவடைவதாக இருந்தது.இந்த நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு தேர்வு முடிவு சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. எனவே பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி 31-ந் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விஸ்வநாதன் கூறுகையில், ‘29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை விண்ணப்பிப்பவர்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அசோக் நகரில் உள்ள ஸ்டெல்லா மேட்டிட்டியூனா பி.எட். கல்லூரி, சைதாப்பேட்டையில் உளள அரசு பி.எட். கல்லூரி ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை 8 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்’ என்றார்.