பிளஸ் 2 உடனடி தேர்வு விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் : "பிளஸ் 2 உடனடித்தேர்வு எழுதியோர், விடைத்தாள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்,”என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.


அவரது அறிவிப்பு: ஜூன், ஜூலையில் பிளஸ் 2 உடனடி தேர்வெழுதி விடைத்தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்தவர்கள் student.hse14rtrv.in என்ற இணையதளத்தில், தங்களின் பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் Application for Retotalling / Revaluation என்ற தலைப்பை 'கிளிக்' செய்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். அதை பூர்த்தி செய்து, இருநகல்கள் எடுத்து, நாளை (ஜூலை 30) காலை 10:00 மணி முதல் ஆக., 4 பகல் 1:00 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதற்கான கட்டணத்தை அங்கேயே பணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.