பி.இ., கலந்தாய்வு முடியும் தேதி நெருங்குவதால் தினமும் கூடுதலாக 2,000மாணவர்களுக்கு அழைப்பு.

இன்னும், 11 நாளில், பி.இ., கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்பதால், கலந்தாய் விற்கு அழைக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை, கணிசமாக, அண்ணா பல்கலை அதிகரித்துள்ளது.

தினமும், 5,000 மாணவர்கள் அழைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், 7,000 மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை அழைப்பு விடுத்தது. பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு, கடந்த 7ம் தேதி துவங்கியது. 'ஆகஸ்ட் 4ம் தேதி வரை, கலந்தாய்வு நடக்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இதற்கு இன்னும், 11 நாட்களே உள்ளன. ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு), 'நாடு முழுவதும், ஆகஸ்ட் 1ம் தேதி, பி.இ.,முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்க வேண்டும்' என, ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இதனால், அனைத்து பொறியியல் கல்லூரி நிர்வாகிகளும், ஆக., 1ம் தேதியில் இருந்து, வகுப்புகளை துவக்க, தயாராகி வருகின்றனர்.கலந்தாய்வு மூலம் தனியார் கல்லூரிகளில், 'சீட்' எடுத்த மாணவர்கள், கல்லூரியை அணுகி, கட்டண விவரங்களையும், கல்லூரி திறக்கும் தேதி விவரங்களையும் கேட்டு வருகின்றனர்.

இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டுள்ள அண்ணா பல்கலை, குறித்த தேதியில், கலந்தாய்வை முடிக்கும் வகையில், கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை, நேற்று முன்தினத்தில் இருந்து, கணிசமாக அதிகரித்து உள்ளது. கடந்த22ம் தேதி, 5,093 பேர் அழைக்கப்பட்ட நிலை யில், நேற்று முன்தினம், 6,938 பேர் அழைக்கப்பட்டனர். 2,000 பேர், கூடுதலாக அழைக்கப் பட்டனர். இதே அளவில், வரும் நாட்களிலும், மாணவர் அழைக்கப் படுவர் என, பல்கலை வட்டாரம் தெரிவித்தது. பி.இ., படிப்பில் சேர, 1.68 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்கள் அனைவரையும் கருத்தில்கொண்டே, கலந்தாய்வு அட்டவணையை, பல்கலை தயாரித்தது. 23ம் தேதி வரை முடிந்த, 16 நாள் கலந்தாய்வில், 86,039 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். அடுத்த 11 நாளில், 81,961 பேர், கலந்தாய்விற்கு அழைக்கப்பட உள்ளனர்.