தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தகுதி சான்று வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்றனர். இவர்களில் அதிக மதிப்பெண், இடஒதுக்கீடு மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு முதல் கட்டமாக விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களின் தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு செல்லும். இதற்கு அடையாளமாக அவர்களின் பதிவு எண், மதிப்பெண், தேர்ச்சி பெற்ற ஆண்டு உள்ளிட்ட விவரம் அடங்கிய சான்றிதழ் வழங்கப்படுகிறது.


74 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ்களை தயாரித்து வழங்கும் பணியை எளிமைப்படுத்த ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அணுகுமுறையை கையாள முடிவு செய்துள்ளது. இதன்படி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நெட் தகுதி தேர்வுக்கான சான்றிதழ்களை ஆன்லைனில் மட்டுமே வழங்குவது போல் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ்களையும் ஆன்லைன் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது. 

தேர்வு வாரிய குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வரும்போது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் தனது பதிவு எண், பிறந்த தேதி, தேர்வு எழுதிய மாதம், ஆண்டு உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு இணையதளத்தில் இருந்து சான்றிதழை நேரிடையாக பதிவிறக்கம் செய்யலாம்.