'காசாய்வு' ஆன ஆசிரியர் கலந்தாய்வு

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாறுதல் என்ற பெயரில் 'காசாய்வு' மாறுதல் நடக்கிறது,'' என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் கூறினார்.சங்க ஆய்வு கூட்டம் காரைக்குடியில் நடந்தது. இதில் அவர் கூறியதாவது:கலந்தாய்வு மாறுதல் என்ற பெயரில் 'காசாய்வு' மாறுதல் நடக்கிறது. வெளிப்படைத்தன்மை இல்லை. போக்குவரத்துக்கு வசதியான காலி பணியிடங்கள் மறைக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை உள்ள மாணவர் ஆசிரியர் விகிதாச்சார அடிப்படையில், பணிநிரவல் செய்வது கூடாது. கல்வி உரிமைச்சட்டத்தின் படி, 2014ம் ஆண்டு, நவம்பர் மாத சேர்க்கைக்கு பிறகு, ஆசிரியர், மாணவர் விகிதத்தை கணக்கில் கொண்டு பணிநிரவலை மேற்கொள்ள வேண்டும். ஒளிவுமறைவு இன்றி, அனைத்து இடங்களும் அறிவிக்கப்பட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும்.படைப்பாற்றலையும், சிந்தனை திறனையும் வளர்ப்பது தாய்மொழி கல்வி தான். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி நாடுகள், தாய்மொழியில் தான் கல்வி கற்று வருகின்றன. இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைய வலியுறுத்தியும், பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட கோரியும், தமிழக அரசை வலியுறுத்தி சங்கங்கள் (டிட்டோஜாக்) கூடி விரைவில் போராட்டங்களை அறிவிக்க உள்ளன, என்றார்.