ஓய்வூதியருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்:விண்ணப்பங்களை ஜூலை 31 வரை வழங்கலாம்

ஓய்வூதியருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட விண்ணப்பங்களை வழங்க ஜூலை 31வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட கருவூல அலுவலர் ஆர்.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:2014, ஜூலை 1 முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் , நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது விவரங்களை உரிய படிவத்தில் ஜூன் 30-ம் தேதிக்குள்அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.பெரும்பாலான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத்தில், பொதுத்துறை வங்கியில் இன்னமும் அளிக்காத காரணத்தால், ஜூலை31-ம் தேதி வரை விண்ணப்பங்களை வழங்க காலக்கெடு நிர்ணயித்து அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரை விண்ணப்பங்களை வழங்காதவர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத்தில், பொதுத்துறை வங்கிக்கிளையில் அளித்து, அதன் ஒரு நகலினை ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் கையொப்பத்துடன் மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும்.படிவ நகலினை, அடையாள அட்டை வழங்கப்படும்வரை இத்திட்டத்தின் கீழ் பணச்செலவின்றி ஜூலை 1 முதல் மேற்கொள்ளும் மருத்துவச் சிகிச்சைக்குபயன்படுத்திக் கொள்ளலாம்.இது ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்,கருவூலங்கள் மற்றும் பொதுத்துறை வங்கி மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.