டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகள் ஜூன் 29–ந் தேதி ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2  உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகள் ஜூன் 29–ந் தேதி ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வருகிற 29–ந் தேதி குரூப்–2 தேர்வினை தமிழகம் முழுவதும் நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த தேர்வில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப்–2 தேர்வை கடந்த 2011–ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது. அதன்பின்னர் 3 ஆண்டு இடைவெளி விட்டு தற்போது வருகிற 29–ந் தேதி நடத்துவதால், இந்த தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெறவேண்டும் என்று பட்டதாரிகள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், குரூப்–2 தேர்வு நடைபெறவுள்ள அதே நாளில் (ஜூன் 29–ந் தேதி) மேலும் 3 போட்டி தேர்வுகள் நடைபெற உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய உளவுத்துறையின் (ஐ.பி) இளநிலை உளவு அதிகாரி பதவிக்கு நாடு முழுவதும் ஜூன் 29–ந் தேதி தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி பதவிக்கான தேர்வும், தேசிய ஆசிரியர் தகுதி தேர்வும் இதே நாளில் நாடு முழுவதும் நடைபெறுகிறது.
இதனால் இந்த 4 தேர்வுகளுக்கும் விண்ணப்பம் செய்தவர்கள் ஏதாவது ஒரு தேர்வினை மட்டுமே எழுதக்கூடிய நிலையில் உள்ளனர். இந்த 4 போட்டி தேர்வுகளில் எதில் பங்கேற்பது என்ற மிகப்பெரிய குழப்பம் பட்டதாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால், குரூப்–2 தேர்வு தேதியை தள்ளி வைக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு பலர் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வருகின்றனர். சிலர் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு நேரில் சென்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வங்கி அதிகாரி பணி, மத்திய உளவு துறை அதிகாரி பணி மற்றும் குரூப்–2 ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்துள்ள சிலர் நிருபரிடம் கூறும்போது, ‘இந்த 3 தேர்வுகளுமே எங்களுக்கு முக்கியமானது. ஆனால், இந்த தேர்வுகள் அனைத்தும் ஒரே நாளில் வருவதால், எங்களால் எந்த தேர்வில் பங்கேற்பது என்று தெரியவில்லை. எனவே குரூப்–2 தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு பல முறை கடிதம் மூலமாகவும், நேரிலும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என்று வேதனையை தெரிவித்தனர்.