வரும் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.6,200 கோடி கூடுதலாக ஒதுக்கீடு!

வரும் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.6,200 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
அறிவித்துள்ளார். மாநில கல்வி அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகளின் வகுப்புகள், தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், திறனறித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

 
ஊரடங்கு முடிந்த உடன், வரக்கூடிய கல்வி ஆண்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், கல்வித்துறை செயலாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், செயலாளர்கள் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர். இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேட்டி அளித்துள்ளார்.
 
அவர் கூறியதாவது;  செலவிடப்படாத நிதியான ரூ.6,200 கோடி பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்படுகிறது. வீடுகளில் முடங்கிய மாணவர்களுக்கு, மதிய உணவுக்கு பணம் மானியமாக வழங்கப்படும். சிபிஎஸ்சி பள்ளிகள் தவிர பிற பள்ளி மாணவருக்கு சத்துணவு பணம் மானியமாக வழங்கப்படும். உணவு பாதுகாப்பு நிதியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்படும் மதிய உணவுத் திட்ட நிதியில் இருந்து 10.99% நிதி உயர்த்தப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு விடைத்தாளை மதிப்பீடு செய்யும் பணிகளை உடனே தொடங்கவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை எல்லா நேரங்களிலும் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தக் கூடாது. அதேநேரம் தேர்வுகள் நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.