அரசு ஊழியர்களுக்கான பரிசுத்தொகை வரம்பை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசு ஊழியர்கள் ரூ.25,000 வரையிலான பரிசுகளை பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருமணம்,பிறந்த நாள், வீடு குடிபுகுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போதும் அரசு ஊழியர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பரிசு பெறுவதற்கு விதிமுறைகள் உள்ளன. அதன்படி ஏற்கனவே இது போன்ற நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள் ரூ.5000 வரையே பரிசு பெறலாம் என்று இருந்தது.
தற்போது ரூ.25,000 வரையிலான பரிசு பொருட்களை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து திருமணம், பிறந்தநாள், மத சார்பிலான பண்டிகைகள், இறுதிச் சடங்கு போன்றவற்றிற்கு பரிசாக ரூ.25,000 வரை பெற்றுக் கொள்ளலாம். மொத்தத்தில் பரிசாகப் பெறக்கூடிய தொகையின் மதிப்பு ரூ.10 லட்சம் அல்லது 6 மாத மொத்த ஊதியம் இதில் எது குறைவோ அந்த தொகையாக இருக்க வேண்டும். இதுவரை ரூ.5000 வரை உச்சவரம்பாக இருந்து வந்த நிலையில் தற்போது இந்த தொகை 5 மடங்கு உயர்த்தப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இது தவிர அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கோ அல்லது புதிய வீட்டை வாங்குவதற்கோ உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் வட்டி இல்லாமல் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம் எனவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஊழலுக்கு வித்திடும் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே வேளையில் பரிசு பொருட்கள் பெறுவது குறித்து யாரும் பெரிதாக கணக்கில் கொள்வதில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.