வேளாண் நுழைவுத்தேர்வு மாத இறுதியில் விண்ணப்பம்

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின், அகில இந்திய வேளாண் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள், இம்மாத இறுதியில் வெளியிடப்படுகின்றன.ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றம் நிறுவனங்களில், வேளாண்மை, பொறியியல், தோட்டக்கலை, கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் போன்ற பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. 


இளநிலை படிப்பில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், ஒதுக்கீட்டு முறையில் நிரப்பப்படுகின்றன.இதற்காக ஒவ்வொரு ஆண்டும், தேசிய அளவில் வேளாண் நுழைவுத் தேர்வை, ஐ.சி.ஏ.ஆர்., நடத்துகிறது.இந்தாண்டுக்கான, இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, மே, 12; முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான தேர்வு, மே, 13 தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஐ.சி.ஏ.ஆர்., நிறுவன விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், 'நிர்வாக காரணங்களால், நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. விரைவில் புதிய தேதிகள் அறிவிக்கப்படும். ஏப்ரல் இறுதி வாரத்தில், விண்ணப்பங்கள் வெளியிடப்படும்.'இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின், www.icar.org.in என்ற இணையதளத்தில், தகவல்களை அறிந்துகொள்ளலாம். வேளாண் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அரசு உதவித்தொகையுடன் படிக்க, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்' என்றார்.