பள்ளி திறப்பு தள்ளிவைப்பு - முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது; ஏப்., 6ல் முடிகிறது. மார்ச், 7ல் துவங்கிய, பிளஸ் 1 தேர்வு, ஏப்., 16ல் முடிகிறது. மார்ச், 16ல் துவங்கவுள்ள, 10ம் வகுப்பு தேர்வு, ஏப்., 20ல் முடிகிறது.பொதுத் தேர்வு அல்லாத மற்ற, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்., 20க்குள் தேர்வுகளை முடிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதைஅடுத்து, ஏப்., 21 முதல், பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது.
அடுத்த கல்வி ஆண்டு, ஜூன், 1, வெள்ளிக்கிழமை துவங்குகிறது. அன்று வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறு சேர்த்து, கோடைவிடுமுறையை, ஜூன், 3 வரை நீட்டிக்க, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி அளித்ததும், முறையான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.வழக்கமாக ஜூன், 1ம் தேதி, வார வேலைநாளாக இருந்தால், அன்றே பள்ளிகள் திறக்கப்படும். இந்த முறை வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறை சேர்த்து, ஜூன், 3 வரை விடுமுறைநீட்டிக்கப்பட உள்ளது.
வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு, 31 நாட்கள் தான் விடுமுறை கிடைக்கும். இந்தாண்டு, 44 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க உள்ளது.கடந்த ஆண்டு வரை, தொடக்கப் பள்ளிகள், ஏப்ரல், 30 வரை இயங்கின. நடப்பு கல்வி ஆண்டில், தொடக்கப் பள்ளி வேலை நாட்களை, 220 நாளில் இருந்து, 210 நாட்களாக, தமிழக அரசு குறைத்து உள்ளது. இதனால், கூடுதலாக, 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
வெயிலை பொறுத்து நடவடிக்கை
வெயிலின் அளவை பொறுத்து, ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்து, பெற்றோர் கோரிக்கை வைத்தால், அது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தேவை இருப்பின், கூடுதல் நாட்கள் கோடை விடுமுறை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.