டி.இ.ஓ., 'பொறுப்பு' நியமனத்தில்மோதல்:கல்வி இயக்குனருக்கு சங்கங்கள் புகார்

மதுரையில் மேலுார் கல்வி மாவட்ட அலுவலர் (டி.இ.ஓ.,) 'பொறுப்பு' நியமனத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்கங்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.

மதுரையில் மேலுார் டி.இ.ஓ.,வாக இருந்த லோகநாதன் மே மாதம் ஓய்வு பெற்றார். மேல்நிலை பள்ளி தலைமையாசிரியை இந்துமதிக்கு 'கூடுதல் பொறுப்பு' வழங்கப்பட்டது. அவரும் இம்மாதம் ஓய்வு பெறுவதால் தற்போது வண்டியூர் அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியை ஜமுனாவிற்கு டி.இ.ஓ., 'கூடுதல் பொறுப்பு' வழங்கப்பட்டுள்ளது.இதற்கு மேல்நிலை தலைமையாசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமைஆசிரியர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.இப்பிரச்னை குறித்து இரு தரப்பினரும் கல்வி இயக்குனர், செயலாளருக்கு புகார் அனுப்பியுள்ளனர். மதுரையில் பதவிக்காக தலைமை ஆசிரியர்கள் மோதல் சம்பவம் அத்துறையில் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.உயர்நிலை பள்ளி தலைமையாசிரியருக்கும் மேல்நிலை பள்ளிக்கும் தொடர்புஇல்லை. தற்போது பிளஸ் 1ம் பொது தேர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. டி.இ.ஓ.,வாக பொறுப்பு பொறுப்பேற்கும் பட்சத்தில் பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும்.விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு 'கேம்ப்' அதிகாரியாக இருக்க வேண்டும். நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதவிர டி.ஆர்.பி., உட்படபல்வேறு தேர்வுகள் நடக்கும் போதும் டி.இ.ஓ., பணி முக்கியம் வாய்ந்ததாக இருக்கும். இதற்கு அனுபவம் உள்ள மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் தான் சரியாக இருக்க முடியும்.மதுரையில் இரண்டு ஆண்டுகளாக மேல்நிலைக்கு தான் 'டி.இ.ஓ., பொறுப்பு' வாய்ப்பு அளிக்கப்பட்டது. தொடக்க கல்வி அலுவலர் பொறுப்பிற்கே உயர்நிலை தலைமையாசிரியர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம்.மேலுார் 'டி.இ.ஓ., கூடுதல் பொறுப்பு' உத்தரவை திருப்ப பெற்று பதவி உயர்வு பேனில் உள்ள மேல்நிலை தலைமையாசிரியருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

செல்வராஜ், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கழக மாநில துணை தலைவர்

இது வழக்கமான உத்தரவு தான். டி.இ.ஓ., பதவி உயர்வில் 40 சதவீதம் உயர்நிலை பள்ளி தலைமைஆசிரியருக்கு வழங்கப்படுகிறது. அப்போது டி.இ.ஓ.,க்களாக பணியாற்றும்போது டி.இ.ஓ., பொறுப்பு பணியை மேற்கொள்ள முடியாதா. மதுரையில் ஒரு முறை மேல்நிலை, ஒரு முறை உயர்நிலை தலைமைஆசிரியருக்கும் 'பொறுப்பு' வாய்ப்பு அளிக்கப்படுகிறது.தற்போது கல்வி அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவு சரியானது. ஒரு சங்கம் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இது கல்வித்துறை விதிக்கு கட்டுப்படாமல் களங்கப்படுத்தும் முயற்சி. பல்வேறு சிக்கலை ஏற்படுத்தும்.