இணையதளத்தில் புது ரேஷன் கார்டு!

புதிய ரேஷன் கார்டு கோரி, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை, உணவுத் துறை துவக்கியது. புதிய ரேஷன் கார்டுக்கு, சென்னையில் உணவு வழங்கல் உதவி ஆணையர்; மற்ற பகுதிகளில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் விண்ணப் பிக்க வேண்டும். விண்ணப்பித்த, 60 நாட்களுக்குள் கார்டு வழங்க வேண்டும். உரிய
ஆவணங்கள் வழங்கினாலும், அதிகாரிகள், குறித்த காலத்தில், கார்டு வழங்காமல், மக்களை அலைய வைக்கின்றனர்.இதையடுத்து, இணையதளம் வாயிலாக, புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை, உணவுத் துறை துவக்கியுள்ளது.

இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டம், 2016ல் செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். பல குழப்பங்களால், தற்போது தான் துவங்கியுள்ளது. புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன், www.tnpds.gov.in என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். அதில், ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டின் எண்ணை குறிப்பிட்டு, புதிய கார்டு பெற இருப்போரின் பெயரை நீக்க வேண்டும்.
பின், அதே இணையதளத்தில், 'ஸ்மார்ட் அட்டை' என்ற பகுதிக்கு சென்று, அதில் கேட்கப்பட்ட விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பின், 'ஆதார்' கார்டை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஏற்கனவே உள்ள பெயரை நீக்காமல், புது கார்டுக்கு விண்ணப்பித்தால், ஆதார் எண் மூலம் தெரிந்து விடும்; அவர்களால் விண்ணப்பிக்க முடியாது. ஏழு நாட்களுக்குள், வீடுகளில் ஆய்வை முடித்து, புது ரேஷன் கார்டு வழங்க, அதிகாரிகள் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜூனில் வினியோகம்! : ஏற்கனவே உள்ள, 1.89 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 'ஸ்மார்ட்' கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், தற்போது, இணையதளத்தில் புது கார்டுக்கு விண்ணப்பித்தாலும், ஜூன் மாதம் தான் வழங்கப்படும்.