இணைய வழி கல்வி அறிமுகம் : பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

 ''தமிழகம் முழுவதும் 65.20 கோடி ரூபாயில் 1,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். 2017 -18ம் ஆண்டில் அரசு பள்ளிகளில் இணைய வழி கல்வி அறிமுகமாகும்,'' என பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.


மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக்கில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில், பள்ளிகளை தரம்படுத்துதல் குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது. இதில், அவர் பேசியதாவது: வட கிழக்கு பருவமழை துவங்குவதால், பள்ளிகள் மாணவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்', இணைய வழி கல்வி திட்டம் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2017 - 18ம் கல்வி ஆண்டில், அனைத்து அரசு பள்ளிகளிலும் இணைய வழி கல்வி அறிமுகப்படுத்தப்படும்.இதற்காக, 150 பாடங்கள் தயார் நிலையில் உள்ளன.


 இதன் மூலம் கற்பித்தல் மற்றும் கற்றல் முறை எளிமையாகும். தற்போது, இணைய வழி கல்வி திட்டத்திற்காக கணினி, 'புரொஜக்டர்' உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், 65.20 கோடி ரூபாயில் 1,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.மாணவர்களுக்கு 'வைட்டல்' திட்டத்தின் மூலம் நீதி போதனை கருத்துக்கள் பயிற்றுவிக்கப்படும். தலைமை ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி, பொதுத்தேர்வில் மாணவர்கள் எளிதில் வெற்றி பெற வழிவகுக்கும்.புதிய கல்விக் கொள்கையால், ஏற்கனவே தமிழகத்தில் அமலில் இருக்கும் சிறந்த திட்டங்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றார்.