தமிழக ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை சி.பி.எஸ்.இ. பயிற்சி குழுவினர் பேட்டி

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை என்று சி.பி.எஸ்.இ. பயிற்சி குழு நிபுணர் தெரிவித்தார்.

கல்வித்தரம்

உலகத்தரத்திற்கு கல்வித்திட்டங்கள் இருக்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. நிறுவனத்தின் குழு இந்தியாவில் பல்வேறு நகரங்களில் உள்ள சி.பி.எஸ்.இ. மற்றும் மாநில அரசு பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

சென்னையிலும் நேற்று இந்த பயிற்சி நடந்தது. அடுத்து கோவை, ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி குறித்து அந்த குழுவை சேர்ந்த நிபுணர் சித்ரா ரவி கூறியதாவது:-
பதற்றத்தை குறைக்கவேண்டும்

தேர்வுகளால் ஆசிரியர்களும், மாணவர்களும் பதற்றப்படுகிறார்கள். அந்த பதற்றத்தை குறைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பள்ளிகளில் குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுத் தேர்வுகளைவிட மாணவர்களின் வளர்ச்சியையும், குறைபாட்டையும் தெரிந்துகொள்வதே ஆசிரியரின் கடமை.
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை. வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் பாடத்தினால் மாணவர்கள் அடைய இருக்கும் கற்றல் வெளிப்பாட்டை தெரிந்திருக்க வேண்டும். இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, பள்ளிகளுக்கும், பெற்றோருக்கும் பயன்தரும்.

தேர்வு முறையில் மாற்றம்

இதுவரை 123 பள்ளிகளில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. வருங்காலத்தில் கற்றல் முறையை மேம்படுத்தும் தேர்வுகள் இடம்பெற வேண்டும். பருவத்தேர்வுகள் மறைந்து ஒவ்வொரு வகுப்பறையிலும் உருவாக்க தேர்வுகள் நடக்கவேண்டும். பாடத்தை மையப்படுத்தும் தேர்வு முறை ஒழிந்து மாணவர்களின் கற்றல் திறன் வெளிப்பாட்டை மையப்படுத்தும் தேர்வு நடக்கவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.